

திருமங்கலம்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டியல் இனத்தில் இடம் பெற்றுள்ள 7 பிரிவினரை தேவேந்திரகுல வேளாளர் என பெயரிட்டு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என அறிவித்தார். இதுகுறித்து நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழு பரிந்துரை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு பிள்ளைமார் சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திடீரென திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை எடுத்து வீசி எறிந்தனர். இதையடுத்து போலீசார் சாலை மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.