மனிதர்களுடன் விண்வெளிக்கு புறப்பட்டது விர்ஜின் கேலடிக் விண்கலம்

புவிஈர்ப்பு விசை கொஞ்சம் குறைவாக உள்ள இடத்தில், விண்கலம் சிறிதுநேரம் வெற்றிகரமாக மிதந்தபின் எஞ்சின்கள் எதிர் திசையில் இயக்கப்பட்டு, பூமியை நோக்கி திரும்பி வரும்.
விண்கலத்தை சுமந்துகொண்டு புறப்பட்ட விமானம்
விண்கலத்தை சுமந்துகொண்டு புறப்பட்ட விமானம்
Published on

நியூயார்க்: 

விண்வெளி போட்டியில் வேகமாக முன்னேறி வரும் நிறுவனம் விர்ஜின் கேலடிக். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கு சோதனை முயற்சியாக யூனிட்டி-22 என்ற விண்கலத்தை இன்று விண்ணுக்கு செலுத்தியது. 

விஎம்எஸ் ஈவ் என்ற இரட்டை விமானம் மூலம் நியூ மெக்சிகோவில் இருந்து இந்த விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதில், விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் சர் ரீச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லா உள்ளிட்ட 6 பேர் விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஓசோன் லேயர் முடியும் தூரம் வரை விஎம்எஸ் ஈவ் விமானம், இந்த யூனிட்டி விண்கலத்தை சுமந்து செல்லும். அதன்பின் விண்கலம் விமானத்தில் இருந்து கழன்று, விண்வெளியை நோக்கி பறக்கும்.

மொத்தமாக இந்த விண்கலம் மனிதர்களோடு விண்வெளிக்கு சென்றுவிடாது. இது டெஸ்ட் பிளைட்தான். இந்த ராக்கெட் 90 கிமீ உயரம் வரை விண்வெளிக்கு செல்லும். அங்கு புவிஈர்ப்பு விசை கொஞ்சம் குறைவாக இருக்கும். விண்கலத்தில் இருக்கும் வீரர்கள் இதனால் மிக மிக லேசாக மிதப்பார்கள். அப்போது விண்கலத்தின் ஜன்னல்கள் வழியாக எடையற்ற தன்மையை உணர்வார்கள். 

விண்கலம் சிறிதுநேரம் வெற்றிகரமாக மிதந்தபின் எஞ்சின்கள் எதிர் திசையில் இயக்கப்பட்டு, பூமியை நோக்கி திரும்பி வரும். மொத்தமாக இந்த விஎம்எஸ் யூனிட்டி விண்கலத்தின் பயணம் 90 நிமிடங்கள் ஆகும்.

ஆண்டுக்கு 400 விண்வெளி பயணங்களை நடத்த விர்ஜின் கேலடிக் திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 600 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com