நில மோசடி செய்த ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் கைது

திருவள்ளூர் அருகே போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்த ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கே.கே. நகர் 4-வது தெரு சேர்ந்தவர் கிஷண்லால். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 2010-ம் ஆண்டில் தன் மனைவி பெயரில், திருவள்ளூரை அடுத்த சிறுவானூர் வேடங்கி நல்லூர் கிராமத்தில் 25 ஏக்கர் நிலத்தை வாங்கினார்.

இதை திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்து இருந்தார். அப்போது திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகர், ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரான நித்யானந்தம் (வயது 70) என்பவர் கிஷண்லாலுக்கு உதவி புரிந்து வந்தார்.இந்த நிலையில், கிஷண்லால் மனைவி பெயரில் இருந்த நிலத்தை போலி ஆவணம் தயாரித்து நித்யானந்தம் மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமாரிடம் புகார் மனு அளித்தார்.

இதையடுத்து, நில அபகரிப்பு தடுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமையில், இன்ஸ்பெக்டர் பரந்தாமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நேற்று நித்யானந்தத்தை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com