

நாமக்கல்:
நாமக்கல்-சேலம் சாலையில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்க பணி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சாலையோரம் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதற்காக கருப்பகவுண்டர் வளைவு அருகே உள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமையான மரத்தை அகற்ற வேண்டி இருந்தது.
இதையடுத்து அந்த மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் மறுநடவு செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக மரத்தின் கிளைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. பின்னர் ஏற்கனவே இதுபோன்று மரங்களை மறுநடவு செய்து பராமரித்து வரும் துளிகள் என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து, அந்த மரத்தை கிரேன் உதவியுடன் வேரோடு பிடுங்கி, லாரியில் ஏற்றி முதலைப்பட்டி அருகே உள்ள நெடுங்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் பள்ளம் தோண்டி மீண்டும் நட்டனர்.
நெடுஞ்சாலைத்துறையின் இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.