

அரக்கோணம்:
அரக்கோணம் அருகே அனந்தாபுரம் கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல சாலை வசதியில்லாமல் ஆற்றை கடந்து வந்தனர். மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். எனவே, ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ. சு.ரவியிடம் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைப்படி அனந்தாபுரம்- தக்கோலம் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.13½ கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை அனந்தாபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ், தக்கோலம் பேரூர் செயலாளர் பச்சையப்பன் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.