கொளத்தூர் அருகே 100 ரூபாய்க்காக தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை

கொளத்தூர் அருகே பெட்ரோல் போட 100 ரூபாய் தர மறுத்த தனியார் நிறுவன ஊழியரை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

செங்குன்றம்:

சென்னை கொளத்தூர் வளர்மதி நகர் அருகே ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர், கொளத்தூர் வளர்மதி நகரைச் சேர்ந்த சங்கர் (வயது 49) என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிந்தது.

சம்பவத்தன்று சங்கர், தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொளத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சசிகுமார் (20) என்பவர் சங்கரிடம் ‘லிப்ட்’ கேட்டு அவரது மோட்டார்சைக்கிளில் ஏறிச்சென்றார். சிறிது தூரம் சென்று கீழே இறங்கிய சசிகுமார், தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லாததால் நின்றுவிட்டது, பெட்ரோல் போட 100 ரூபாய் தரும்படி சங்கரிடம் கேட்டார்.

அதற்கு சங்கர், மோட்டார்சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு ஏறி வந்ததுடன், 100 ரூபாய் வேறு தரவேண்டுமா? என கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சசிகுமார், சங்கரை அடித்து கொலை செய்துவிட்டு, அவரது சட்டை பையில் இருந்த 100 ரூபாயை எடுத்துச் சென்றுவிட்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பந்தமாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான சசிகுமார், அன்னை சோனியா காந்தி பேரவையின் வடசென்னை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருவதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com