புதுவை ஜெயிலில் உணவு தட்டுகளால் கைகளை கிழித்து கைதிகள் தற்கொலை முயற்சி

சிறை கைதிகள் 7 பேர் திடீரென உணவு சாப்பிடும் தட்டுகளால் தங்கள் கைகளில் கிழித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது.
தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி
Published on

புதுச்சேரி:

புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 74 தண்டனை கைதிகள் மற்றும் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக அடிக்கடி புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிறிஷ்னியா உத்தரவின் பேரில் போலீசார் காலாப்பட்டு சிறையில் அவ்வப்போது சோதனை நடத்தி கைதிகள் அறைகளிலிருந்து செல்போன்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

கடந்த 12-ந் தேதி நடந்த சோதனையில் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் என்ற கைதியிடம் இருந்து ஒரு செல்போனை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், குடும்பத்தினரை சந்திக்க விடுவதில்லை என கூறியும் 50-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் நேற்று திடீரென உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

அப்போது சிறை கைதிகள் 7 பேர் திடீரென உணவு சாப்பிடும் தட்டுகளால் தங்கள் கைகளில் கிழித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

உடனே அவர்களை சிறை வார்டன்கள் மீட்டு சிகிச்சைக்காக காலாப்பட்டு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் விசாரணை கைதிகள் ஏழுமலை , ஸ்டீபன் ஆகிய 2 பேரும் சோப்பு மற்றும் ஷாம்பு போன்ற ரசாயன கரைசலை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் மயங்கி விழுந்த அவர்களை சிறைத்துறை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் காலாப்பட்டு ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com