

சோழிங்கநல்லூர்:
நிவர் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக தமிழகத்தின் பல இடங்கள் பாதிக்கப்பட்டன. சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. செம்மஞ்சேரி ஜவஹர் நகர், எழில் முகநகர் மற்றும் சுனாமி குடியிருப்பில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு குடியிருந்த மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். சுனாமி குடியிருப்பு வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவானது.
இதையடுத்து நேற்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். மேலும் அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். செம்மஞ்சேரி பகுதியில் மழை நீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க தே.மு.தி.க. சார்பில் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார். அப்போது தென்சென்னை மாவட்ட செயலாளர் பிரபாகரன் உடன் இருந்தார்.