தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைப்பு

நாளை நடைபெறவிருந்த நெட் (NET) தேர்வு நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சென்னை:

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையம் சார்பில், கணிதம் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு நாளை தேசிய தகுதித் தேர்வு (CSIR - NET) நடைபெற இருந்தது. இந்த ஆண்டுக்கான தேசிய தகுதித் தேர்வை நவம்பர் 19, 21, 26 ஆகிய தேதிகளில் நடத்த இந்திய தேர்வு முகமை திட்டமிட்டு இருந்தது.

திட்டமிட்டபடி நவம்பர் 19, 21 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், நிவர் புயல் காரணமாக நாளை நடைபெற உள்ள தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்வதில் சிக்கல் எழுந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளைத் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, உரிய நேரத்தில் மாணவர்கள் தேர்வு மையங்களைச் சென்றடைய முடியாது.

கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணிபுரிவதற்கான தகுதித் தேர்வாகவும், முனைவர் பட்ட ஆய்வு மாணவராகப் பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் இந்தத் தேர்வு அமைந்திருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்த தேர்வாகக் கருத வேண்டியுள்ளது. நிவர் புயல் காரணமாக, நாளை நடைபெற உள்ள தேசிய தகுதித் தேர்வை தமிழக மாணவர்களால் எழுத இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த NET தேர்வு நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. விரைவில் தேர்வு தேதி http://nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com