புதுவை மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளரை கொலை செய்ய முயற்சி- போலீசார் விசாரணை

புதுவை மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளரை மர்மநபர்கள் கொலை செய்ய முயன்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை
Published on

புதுச்சேரி:

புதுவை ரெட்டியார்பாளையம் கம்பன் நகரை சேர்ந்தவர் ஏ.கே.டி. ஆறுமுகம். புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார்.

இவர் இரவு தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். ரெட்டியார்பாளையம் கம்பன் நகரில் சென்று கொண்டிருந்த போது 10-க்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, அவரது கார் மீது சரமாரியாக கற்களை வீசினர்.

இதில் காரின் முன்பக்க கண்ணாடி மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் முற்றிலுமாக சேதமடைந்தது. பின்னர் திடீரென்று 2 பேர் ஆயுதங்களை கொண்டு முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர், வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி அந்த கும்பலிடம் இருந்து தப்பி வீட்டிற்கு காரை ஓட்டி வந்தார்

இது குறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் தெற்கு பகுதி எஸ்.பி.யோகேஸ்வரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ஏ.கே.டி.ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்- அமைச்சர் நாராயணசாமி, ஏ.கே.டி. ஆறுமுகம் வீட்டிற்கு விரைந்து வந்து விசாரித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் குற்றவாளிகளை விரைவில் பிடிக்குமாறு போலீசாருக்கு நாராயணசாமி உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com