மாத வாடகைக்கு வாங்கி கார்களை அடமானம் வைத்து நூதன மோசடி

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் கார்களை மாத வாடகைக்கு வாங்கி அடமானம் வைத்து நூதன மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மோசடி
மோசடி
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா என்கிற ஜீவானந்தம். டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பவரது காரை மாத வாடகைக்கு வாங்கி உபயோகப்படுத்தி வந்தார். இதே போல் மேலும் சிலரது கார்களை விக்னேஷ் உதவியுடன் அவர் வாடகைக்கு எடுத்துள்ளார். இதற்காக அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை ஜீவா கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் ஜீவா மாத வாடகை பணம் சரியாக கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அவரை விக்னேஷ் சந்தித்து பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஜீவா, அவரது கார் உள்பட மேலும் சிலரது கார்களை மற்றவர்களிடம் அடமானம் வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்று நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் விக்னேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மற்றும் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஜீவாவின் மோசடிக்கு பண்ருட்டியை சேர்ந்த செல்லமணி, பாலமுருகன் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. தற்போது தலைமறைவாக உள்ள அவர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com