காவல் அதிகாரி பலி - வெள்ளை மாளிகையில் அரை கம்பத்தில் கொடிகளை பறக்க விட பைடன் உத்தரவு

அமெரிக்காவில் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிட பாதுகாப்பு அதிகாரிகளை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ஒருவர் பலியானார்.
அதிபர் ஜோ பைடன்
அதிபர் ஜோ பைடன்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் வெளியே மர்ம நபர் ஒருவர் நீல நிற செடான் காரை கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது மோதியுள்ளார். இதில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.

இதன்பின் காரில் இருந்து வெளியே குதித்த ஓட்டுனர் அதிகாரிகளை கத்தியால் குத்தியுள்ளார். இதில், அதிகாரி ஒருவர் பலியானார்.  இதனால் கேபிடால் போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.

தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரியவில்லை. தாக்குதலுக்கான நோக்கம் பற்றிய விவரமும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து, வாஷிங்டன் பெருநகர காவல் துறை உயரதிகாரி ராபர்ட் கன்டீ கூறுகையில், இது பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையது அல்ல. விசாரணை தொடர்ந்து நடைபெறும் என கூறினார்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு கேபிடால் கட்டிடம் முடக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளே இருந்து யாருக்கும் வெளியே செல்ல அனுமதியில்லை. இதேபோல், கட்டிடத்திற்குள் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க கேபிடால் கட்டிட பாதுகாப்பு அதிகாரியான வில்லியம் பில்லி இவான்ஸ் மர்ம நபர் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் 18 ஆண்டு கால பணி அனுபவம் கொண்டவர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் மனமுடைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அமெரிக்காவின் கேபிடால் பகுதியில் பாதுகாப்பு சோதனை சாவடியில் நடந்த வன்முறை தாக்குதலில் காவல் அதிகாரி வில்லியம் இவான்ஸ் கொல்லப்பட்டும், சக அதிகாரி உயிருக்குப் போராடி வருகிறார் என்பது பற்றியும் அறிந்து ஜில் மற்றும் நான் மனமுடைந்து போனோம். வெள்ளை மாளிகை கொடிக் கம்பங்கள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com