இந்த மரணங்கள் வேதனை அளிக்கிறது... பிரதமர்-மகாராஷ்டிரா ஆளுநர் இரங்கல்

ஆக்சிஜன் கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாக்டர் ஜாகீர் உசைன் மருத்துவமனையில் இன்று ஆக்சிஜன் டேங்கரில் திடீரென கசிவு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வாயு கசிவை கட்டுப்படுத்தினர். 

எனினும் இந்த விபத்தைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கான ஆக்சிஜன் சப்ளை சிறிது நேரம் தடைபட்டதால், வென்டிலேட்டர் ஆதரவுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, மகாராஷ்டிர ஆளுநர் பகத் எஸ்.கோஷ்யாரி, உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஆக்சிஜன் தொட்டியில் ஏற்பட்ட கசிவு காரணமாக நாசிக் மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்து இதயத்தை நொறுக்கியது, அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வேதனை அடைந்தேன் என்று பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார். இந்த சோகமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

மருத்துவமனையில் ஆக்சிஜன் தொட்டி கசிந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் கொரோனா நோயாளிகள் மரணம் அடைந்தது குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரி கூறி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், நடந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com