தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை திறக்க அனுமதி - சவுதி இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவிப்பு

இளவரசர் முகமதுபின் சல்மானின் இத்தகைய நடவடிக்கை காரணமாக சவுதி அரேபியாவில் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமதுபின் சல்மான்
முகமதுபின் சல்மான்
Published on

ரியாத்:

சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அடைத்துவிடுவது பாரம்பரிய பழக்கமாக உள்ளது. இறை வழிபாட்டுக்காக முழு கவனத்துடன் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மரபு கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால் உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா தொற்று இத்தகைய பழக்க வழக்கங்களை அதிரடியாக மாற்றி வருகிறது.

சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகள் அடைக்கப்படுவதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்குததற்காக சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழுகை நேரத்தில் ஏராளமானோர் கடைகள் முன்பு நீண்ட வரிசையில் நிற்கும் நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக வணிக வளாகங்களில் திரளும் மக்கள் கூட்டங்களால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சவுதி அரேபியா இளவரசர் முகமதுபின் சல்மான் சில பொருளாதார, சமூக மாற்றத்துக்கான திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். இது சவுதி அரேபிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இத்தகைய நடவடிக்கை காரணமாக சவுதி அரேபியாவில் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com