பெரம்பலூர் அருகே கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

பெரம்பலூர் அருகே கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் புதுவேலூரை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 31). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் தனது மாமாவான சோலைமுத்துவுடன் சத்திரமனை- செட்டிகுளம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்களில் வந்த சத்திரமனை வேலூரை சேர்ந்த ஆல்பர்ட்(33), சரண்ராஜ்(19) ஆகியோர், வேல்முருகன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை இடித்து, அவர்களை கீழே தள்ளிவிட்டனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் பணம் பறிக்க முயன்றனர். இதனை கண்ட அந்தப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனை கண்ட ஆல்பர்ட்டும், சரண்ராஜூம் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து காயமடைந்த வேல்முருகன், சோலைமுத்துவை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பான புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்பர்ட், சரண்ராஜை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com