குடிநீர் வினியோகம் செய்யக்கோரி குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

வேலூரில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Published on

வேலூர்:

வேலூர் முத்துமண்டபம் டோபிகானா அடுக்குமாடி குடியிருப்பில் 157 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அந்த பகுதியில் உள்ள 5 ஆழ்துளை கிணறுகளில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின்மோட்டார் பராமரிப்பு, மின் கட்டணம் உள்ளிட்டவற்றுக்காக மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.250 செலுத்தி வந்துள்ளனர். இதனை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வசூலித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அடுக்குமாடி குடியிருப்புக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஆழ்துளை கிணறு மின்மோட்டார்களுக்கு மின்கட்டணம் செலுத்தாததால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி நேற்று குடிசை மாற்றுவாரிய அலுவலகத்தில் மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நேரில் அங்கு சென்றனர். அப்போது அங்குள்ள பொதுமக்கள் திடீரென குடிசை மாற்றுவாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டனர். குடிநீருக்காக மாதந்தோறும் ரூ.250 தவறாமல் செலுத்தி வருகிறோம். ஆனாலும் சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறினர். அதற்கு அதிகாரிகள், மின்கட்டணத்தை விரைவில் செலுத்தப்படும். அதுவரை மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com