

செங்குன்றம்:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பழவேற்காடு லைட்ஹவுஸ்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. இங்குள்ள மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் மீன்
பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையில் இருந்து 14 கடல் மைல் தூரத்தில் வீட்டிற்கு படகில் வந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மஞ்சள் மற்றும்
சிவப்பு கலர் கொண்ட ஆளில்லா குட்டி விமானம் ஒன்று கடலில் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அதை மீட்டு பாதுகாப்பாக திருப்பாலைவனம் போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி மீனவர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, “இந்த ஆளில்லா குட்டி விமானத்தில் பான்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 8 அடி நீளத்திற்கு மஞ்சள், சிவப்பு
நிறம் கொண்டதாக உள்ளது. இது குறித்து ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சூரியலங்கா பாபட்லாவிள்ள உள்ள இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
கடந்த 5-ந் தேதி அன்றும் இதேபோல் ஆளில்லா குட்டி விமானம் ஒன்று பழவேற்காடு அருகே உள்ள மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கியது. அதை திருப்பாலைவனம் போலீசார், ஆந்திர மாநிலத்தில் உள்ள விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.