பரமத்திவேலூரில் கோவில்கள், டீக்கடையில் அடுத்தடுத்து திருட்டு

பரமத்திவேலூரில் கோவில்கள், டீக்கடையில் அடுத்தடுத்து திருட்டு போனது. இதில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பஸ் நிலையம் எதிரே மாரிமுத்து என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி இரவு வழக்கம் போல் டீக்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை கடையை திறப்பதற்கு வந்தபோது கடை மேற்கூரையின்‌ சிமெண்டு அட்டை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாபெட்டி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

மேலும் டீக்கடைக்கு அருகே உள்ள கருப்பண்ணசாமி கோவிலின் உண்டியலை தினந்தோறும் இரவு டீக்கடைக்குள் வைத்து பூட்டி செல்வது வழக்கம். இந்தநிலையில் அந்த கோவில் உண்டியலையும் மர்மநபர்கள் உடைத்து சில்லரை காசுகளை விட்டு விட்டு அதில் இருந்த ரூபாய் நோட்டுகளை மட்டும் திருடிச்சென்றதும் தெரியவந்தது.

இதுஒருபுறம் இருக்க பரமத்திவேலூர் பேட்டை சந்தை பகுதி அருகே உள்ள பகவதியம்மன் கோவிலை‌ நேற்று காலை பூசாரி வந்து திறந்தபோது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலுக்கு பின்புறம் இருந்த கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் உண்டியலை திருடிசென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் பூசாரி பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் காணாமல் போன உண்டியல் கோவிலுக்கு பின்புறம் ‌ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ‌உள்ள‌ தண்ணீர் தொட்டியில் கிடந்தது. ‌உண்டியலை திருடிய மர்மநபர்கள் அதனை ‌உடைக்க‌ முடியாததால்‌ அப்படியே போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. பரமத்திவேலூரில் நடைபெற்று வரும் தொடர் திருட்டால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர் திருட்டை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com