பழனி கோவிலுக்கு வந்த எடப்பாடி காவடி குழுவினர்- 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணி தீவிரம்

பழனி கோவிலுக்கு எடப்பாடி காவடி குழுவினர் வருகை தந்ததை முன்னிட்டு 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணி
பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணி
Published on

பழனி:

பழனி தைப்பூச திருவிழாவிற்கு கடந்த 360 ஆண்டுகளாக எடப்பாடி பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். தைப்பூச திருவிழா முடிந்தபின்னர் பழனிக்கு பாதயாத்திரையாக வரும் இவர்கள் வழிநெடுக அன்னதானம் செய்து பாலாற்றங்கரையில் காவடி பூஜை செய்து வழிபாடு நடத்துகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி சண்முகநதியில் புனிதநீராடினர். அதனைதொடர்ந்து காவடி பூஜை செய்தனர். மயில்காவடி, இளநீர்காவடி, மலர்காவடி ஆகியவற்றை குடையுடன் எடுத்து மலையேறினர். மலைக்கோவிலில் வேல் பூஜை செய்துவிட்டு மூலவரை தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து போகர் சன்னதி முன்பாக காவடிக்கு தீபாராதனை செய்து முத்திரை செலுத்தினர். தொடர்ந்து சாயரட்சை பூஜை, நிரந்தரகட்டளை பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.

எடப்பாடி பக்தர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் பர்வதராஜகுல மடத்தில் பொதுகமிட்டி சார்பில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை மலைக்கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மலையில் பஞ்சாமிர்தம் தயாரிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அடிவாரத்தில் உள்ள மடத்தில் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக 9 டன் மலைவாழைப்பழங்கள், 2000 கிலோ பேரிச்சை, 300 கிலோ கற்கண்டு, ஒன்றரை டன் கரும்பு சர்க்கரை, 100 கிலோ தேன், 100 கிலோ நெய் மற்றும் 20 கிலோ ஏலக்காய் கொண்டுவரப்பட்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பஞ்சாமிர்தம் உச்சிகால பூஜையின்போது மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் காவடி குழுவினருக்கு வினியோகம் செய்யப்படும். பூஜைகள் நிறைவு பெற்ற பின்னர் மீண்டும் பாதயாத்திரையாகவே எடப்பாடி திரும்பும் இக்குழுவினர் வருகிற 9-ந்தேதி தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com