பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்தது.
தக்காளி
தக்காளி
Published on

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பொப்பிடி, சோமனஅள்ளி, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பேளாரஅள்ளி, எலங்காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இந்த தக்காளிகளை விவசாயிகள் அறுவடை செய்து பாலக்கோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டுவருகின்றனர்.

இதனிடையே தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் கடந்த வாரங்களில் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்தது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.4-க்கு விற்பனையானது. 15 கிலோ கொண்ட ஒரு கிரேடு தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது.

இந்தநிலையில் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனையானது. 15 கிலோ கொண்ட ஒரு கிரேடு தக்காளி ரூ.150-க்கு விற்பனையானது. இதனால் தக்காளி விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

முழு ஊரடங்கு காரணமாக நேற்று பாலக்கோடு மார்க்கெட்டுக்கு விவசாயிகள் அதிக அளவில் தக்காளியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர். இனி வரும் காலங்களில் தக்காளி விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com