

மதுரை:
கோவில்களில் சித்த மருத்துவமனை தொடங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது வடபழனி, திருத்தனி, மருதமலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கள் மற்றும் ராமேஸ்வரம் கோவிலில் சித்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து கோவில்களிலும் சித்த மருத்துவமனை அமைக்கும் திட்டம் உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை அளிக்கும்படி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்த மருத்துவத்தில் வருங்காலத்தில் ஊசி போட ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. சித்த மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி இல்லை என தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து, கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு மூச்சுத்திணறல், அவசர சிகிச்சை தேவைப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், தமிழகத்தில் உள்ள 33 கொரோனா சித்தா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதியை உடனே ஏற்படுத்தும்படி உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.