வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டதையடுத்து 10,527 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
வாணியாறு அணை
வாணியாறு அணை
Published on

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் உள்ள வாணியாறு அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாணியாறு அணையில் இருந்து 2020-2021 ஆண்டுக்கான புதிய, பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கான பாசன தேவைக்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அணையின் திட்ட வரைவு விதிகளின்படி புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் 4 நனைப்புக்கு 55 நாட்களுக்கும் நாளொன்றுக்கு 90 கன அடி வீதமும், மீதமுள்ள நீரை பழைய ஆயக்கட்டு நேரடி பாசனத்துக்கு ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலும் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். இடதுபுறக் கால்வாய் மூலம் மோளையானூர், கோழிமேக்கானூர், பாப்பிரெட்டிப்பட்டி, அலமேலுபுரம், ஆலாபுரம், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளும், பழைய ஆயக்கட்டு கால்வாய் மூலம் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், ஒந்தியாம்பட்டி, தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி, சின்னாங்குப்பம் ஆகிய கிராமங்களும் பாசன வசதி பெறும். இப்பகுதிகளுக்கு உட்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயனடைய வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com