தென்கொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வடகொரியா நபர் கைது

தென்கொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வடகொரியா நபரை தென்கொரியா ராணுவத்தினர் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சியோல்:

கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக பகைமை நிலவி வந்தது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பிறகு பகைமையை தணிந்து இணக்கமான சூழல் உருவானது.

தற்போது மீண்டும் வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மோதல் வலுக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே வடகொரியாவை சேர்ந்த அரசு எதிர்ப்பாளர்கள் பலர் அண்டை நாடான தென் கொரியாவுக்கு தப்பி சென்று அங்கு அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வட கொரியாவை சேர்ந்த நபர் ஒருவர் இரு நாடுகளின் எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதியைத் தாண்டி தென் கொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்தார். அவரை தென்கொரியா ராணுவத்தினர் கைது செய்தனர். வட கொரியாவை சேர்ந்த நபர்கள் தென் கொரியாவில் தஞ்சம் அடைவதற்காக எல்லை தாண்டி வருவது வாடிக்கை என்ற போதிலும் பலத்த பாதுகாப்பு நிறைந்த ராணுவம் விலக்கப்பட்ட பகுதியைத் தாண்டி ஒருவர் தென் கொரியாவுக்குள் நுழைந்து இருப்பது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.‌

வடகொரியா நபர் தஞ்சம் அடையும் நோக்கில் தென் கொரியாவுக்குள் நுழைந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com