காலையில் திருமணம் முடிந்த நிலையில் மாலையில் புதுமாப்பிள்ளை மரணம்

சாயல்குடியில் காலையில் திருமணம் நடந்த நிலையில் மாலையில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் இருவீட்டாரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மரணம்
மரணம்
Published on

சாயல்குடி:

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. தற்போது இவர்கள் திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் கோணலையில் வசித்து வருகின்றனர்.

இவர்களது மகன் விக்னேஸ்வரனுக்கும் (வயது 27), சாயல்குடியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் சாயல்குடி பகுதியில் உள்ள கோவிலில் விக்னேஸ்வரனுக்கும், அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. இருவீட்டாரும் மகிழ்ச்சியுடன் மணமக்களை வாழ்த்தினர்.

பின்னர் திருமணம் முடிந்த பிறகு புதுமண ஜோடி மணமகள் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு சம்பிரதாய முறைப்படி விருந்து நடந்தது.

இதற்கிடையில் மதியம் 3 மணியளவில் திடீரென விக்னேஷ்வரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்சில் கைவைத்தபடி வலியால் துடித்த அவர் மயங்கி விழ, அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சாயல்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விக்னேஷ்வரன் பரிதாபமாக இறந்தார்.

காலையில் திருமணம் நடந்த நிலையில் மாலையில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் இருவீட்டாரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மணமகன் உடலை பார்த்து மணப்பெண்ணும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com