வில்லிவாக்கத்தில் சொத்துக்காக மாமனாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகன்

சொத்துக்காக மாமனாரை மருமகன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் வில்லிவாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைதான குமார்
கைதான குமார்
Published on

செங்குன்றம்:

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 46-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 82). இவர், தன்னுடைய மகள் பிரேமலதா, மருமகன் குமார் (52) மற்றும் அவர்களது 2 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

குமார், வேலைக்கு எங்கும் செல்லாமல் மனைவி, பிள்ளைகளுடன் கடந்த 4 ஆண்டுகளாக மாமனார் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

ஜெகநாதனுக்கு சொந்தமான இடம் வேலூர் அருகே உள்ளது. அந்த இடத்தை குமார் தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு அடிக்கடி மாமனார் ஜெகநாதனிடம் கேட்டு தகராறு செய்து வந்தார். இதற்கு அவர் மறுத்து வந்தார். இதனால் மாமனார்-மருமகன் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வழக்கம்போல் இருவருக்கும் மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குமார், வீட்டில் இருந்த கத்தியால் மாமனார் ஜெகநாதனை சரமாரியாக குத்திக்கொலை செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேமலதா, தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி வில்லிவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வில்லிவாக்கம் உதவி கமிஷனர் அகஸ்டின் பால்சுதாகர், இன்ஸ்பெக்டர் ரஜீஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று கொலையான ஜெகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் அமர்ந்து இருந்த மருமகன் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சொத்துக்காக மாமனாரை மருமகனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் வில்லிவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com