

நெகமம்:
நெகமம் அருகே உள்ள மெட்டுவாவி புதுக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் மாராத்தாள்(வயது 70). இவர் நேற்று முன்தினம் அங்குள்ள தனது தோட்டத்து வீட்டின் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் முகக்கவசம் அணிந்து வந்தார். பின்னர் மாராத்தாளின் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பெரியகளந்தைக்கு செல்ல வழி கேட்டார். அதற்கு மாராத்தாள் பதில் கூறி கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் அந்த வாலிபர் தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாராத்தாள், நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வாலிபரை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.