

நச்சலூர்:
நச்சலூர் அருகே உள்ள பொய்யாமணி அம்பேத்கர் நகரை சேர்ந்த மருதை. இவரது மனைவி பாசிபதம் (வயது 70). மருதை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பாசிபதம் தனது மகன்களான சோமன் (50), மலையாளம் (42) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மிதமான மழை பெய்து வந்ததால் ஈரப்பதமாக இருந்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை பாசிபதம் தனது வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றுள்ளார்.
அப்போது நிலைதடுமாறியதால், கீழே விழாமல் இருப்பதற்காக அருகில் மின் இணைப்புக்காக வைக்கப்பட்டு இருந்த இரும்பு குழாயை (பைப்) கையில் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாசிபதம் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நங்கவரம் வருவாய் அதிகாரி புவனேஸ்வரி, பொய்யாமணி கிராம நிர்வாக அதிகாரி சண்முகசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். மேலும், மின்சார வாரிய அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் மின்இணைப்பை துண்டித்தனர்.