

முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கும், முத்துப்பேட்டை வெள்ளகுளம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் சந்தியா (வயது22) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்தநிலையில் நேற்று காலை சந்தியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அண்ணாதுரை முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரில் தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து பிரவீன்குமார், அவரது பெற்றோர் ஸ்ரீதர், லட்சுமி ஆகியோர் மீது முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் சந்தியாவுக்கு சாவுக்கு காரணமானவர்களை கைதுசெய்யக்கோரி முத்துப்பேட்டை வெள்ளக்குளம் அருகே அவரது உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.