

சீர்காழி:
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகே இரட்டை காளியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் பழைய பஸ் நிலையத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் நகராட்சி கழிப்பிட கட்டிட கழிவுநீர் விடுவதால் தொடர்ந்து சுகாதாரக்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சீர்காழி நகராட்சியில் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் நேற்று ஆத்திரமடைந்த இரட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சீர்காழி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி ஆணையரிடம் இரட்டை காளி அம்மன் கோவில் தெருவில் உள்ள வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி வரும் காலங்களில் வடிகாலில் கழிவுநீர் விடாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன்பேரில் போராட்டக்காரர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.