

முள்ளக்காடு:
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் தென்றல் நகரை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது43).
இவர் தூத்துக்குடி- திருச்செந்தூர் மெயின்ரோடு அபிராமி நகரில் பேக்கரி நடத்தி வந்தார். இவரது மனைவி ஜெயலதா (42). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
அருணாச்சலம் நேற்று இரவு தனது பேக்கரி முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து ஒரு சொகுசு கார் வந்து கொண்டிருந்தது.
அந்த கார் அங்குள்ள திருப்பத்தில் திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பேக்கரி முன்பு நின்ற அருணாச்சலத்தின் மீது மோதியது. பின்னர் பேக்கரியின் உள்ளே புகுந்து சுவற்றில் மோதி நின்றது.
இதில் காரின் அடிப்பகுதியில் சிக்கிய அருணாச்சலம் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சித்திரைபாண்டி மற்றும் போலீசார் அருணாச்சலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.