செய்யூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து- வாலிபர் பலி

செய்யூர் அருகே கல்குவாரிக்கு சொந்தமான லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
லோகநாதன்
லோகநாதன்
Published on

மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த தென்னாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோகநாதன் (வயது 26). இவர் நாகமலையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இவர் நேற்று காலை பால் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோது நாகமலையிலிருந்து ஓணம்பாக்கம் கல்குவாரிக்கு சென்ற லாரி, லோகநாதன் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

இதையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அதன் பின்னர், அவர்கள் ஆத்திரமடைந்து கல்குவாரியை மூடக்கோரி சித்தாமூர் செய்யூர் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக்கோரியும், லாரி உரிமையாளர் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

ஏற்கனவே நேற்று முன்தினம் செய்யூரில் இதே கல்குவாரிக்கு சொந்தமான லாரி மோதி ஒரு பெண் பலியான நிலையில், நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com