

புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2.61 லட்சம் என்ற உச்சத்தை எட்டி உள்ளது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பு குறித்து முன்னாள் ராணுவ தளபதி வேத பிரகாஷ் மாலிக் கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கார்கில் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட கொரோனாவால் தினம் தினம் உயிரிழக்கும் மக்கள் அதிகம் என அவர் கூறி உள்ளார்.
‘நம் நாடு இப்போது போரில் உள்ளது. நேற்று 1338 இந்தியர்கள், (நேற்று முன்தினம் 1182) தொற்றுநோயால் இறந்துள்ளனர். இந்த உயிரிழப்பானது, கார்கில் போரில் இறந்தவர்களை விட 2.5 மடங்கு அதிகம். இந்த போரில் தேசம் கவனம் செலுத்துகிறதா? தேர்தல் பேரணிகள், நம்பிக்கை சார்ந்த நிகழ்வுகள், விவசாயிகள் போராட்டம், வளங்கள் தொடர்பாக சண்டை நடக்கிறது. இந்தியாவே எழுந்திரு’ என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் வேத பிரகாஷ் மாலிக்.
ஜெனரல் வேத பிரகாஷ் மாலிக், கார்கில் போரின்போது இந்திய ராணுவத் தளபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.