பொறையாறு, சங்கரன்பந்தல் பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம்- பொதுமக்கள் அவதி

பொறையாறு மற்றும் சங்கரன்பந்தல் பகுதிகளில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். அவற்றை பிடித்து காட்டில் விட வலியுறுத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு, காட்டுச்சேரி தரங்கம்பாடி, ஆயப்பாடி, திருக்களாச்சேரி, சங்கரன்பந்தல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் தற்போது குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது.

வீட்டு தோட்டத்தில் உள்ள மா, பலா, வாழை ஆகியவற்றின் காய்களை பறித்து சாப்பிடுவதுடன் அதிகமாக வீணாக்கி விடுகின்றன. கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள் சில வீடுகளில் புகுந்து உணவு பொருள்களை சாப்பிடுவதுடன், குடிநீர் பைப்புகளை உடைத்து சேதமாக்கி விடுகின்றன.

மேலும் டி.வி. ஆண்டனாவை ஆட்டி உடைத்து விடுகிறது. அவற்றை விரட்ட முயன்றால் கடிக்க பாய்கிறது. எனவே குரங்குகள் வீட்டிற்குள் நுழையாதபடி எப்போதும் கதவை பூட்டியே வைத்திருக்க வேண்டி உள்ளது. குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதற்கு கூட அஞ்சுகிறார்கள்.

குரங்குகளின் அட்டகாசத்தால் பொறையாறு, சங்கரன்பந்தல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். வெயில் காலத்தில் கூட காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவுகளை திறந்து வைத்திருக்க முடியவில்லை என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.

கிராமங்களில் 5 முதல் 6 குரங்குகள் மட்டுமே தென்பட்டன. தற்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து 100-க்கணக்கான குரங்குகள் தென்படுகின்றன. இந்த குரங்குகளை தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகமும், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு விட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com