வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த மேலும் 5 பேர் கைது

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த மேலும் 5 பேரை பிடித்து தேர்தல் பறக்கும்படையினர் போலீசில் ஒப்படைத்தனர்.
கைது
கைது
Published on

புதுச்சேரி:

புதுவையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்களுக்கான டோக்கன் வழங்கிய 7 பேரை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்த மேலும் 5 பேரை தேர்தல் பறக்கும்படையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வில்லியனூர் தொகுதி தேர்தல் பறக்கும் அதிகாரி இளங்கோவன் தலைமையிலான குழுவினர் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அரும்பார்த்தபுரம் மேம்பாலம் அருகில் ஜி.என்.பாளையத்தில் வாக்காளர்களுக்கு ஒருவர் பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு தேர்தல் பறக்கும் படையினர் சென்றனர். அப்போது அங்குள்ள முத்து மாரியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர்.

அப்போது அவரது சட்டை பையில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பதும், இவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக இந்த பணத்தை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து முருகனை வில்லியனூர் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுபோல் திருபுவனை தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராமசாமி தலைமையில் தேர்தல் பறக்கும்படை குழுவினரான மகேஷ், மகேஷ்குமார் மற்றும் ஆகியோருடன் காரில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது செல்லிப்பட்டு முருகன் கோவில் அருகே சந்தேகத்திற்குகிடமாக நின்ற 2 பேரை பிடித்து சோதனை நடத்தினர். அவர்களது சட்டை பையில் ரூ.2லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வாக்காளர் பட்டியல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் சோரப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஏழுமலை (வயது45), தனபால் (63) என்பதும், இவர்கள் சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய நின்றிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தேர்தல் பறக்கும்படையினர் அவர்களிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் வில்லியனூரில் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுபோல் மணவெளி தொகுதியில் ஒரு தேசிய கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த குணாநிதி (27), ரமேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 41 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com