நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி - ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நேபாள நாட்டின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பா கடந்த 13-ம் தேதி பதவியேற்றார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட்சி பூசலால்  பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஆட்சியை இழந்தார். இரண்டாவது முறை அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோதும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. எனவே, அவரது பரிந்துரையின்பேரில் அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதிநிதிகள் சபையை கலைத்து, பிரதமர் தேர்தலுக்கான புதிய தேதிகளை அறிவித்தார். 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து நேபாள காங்கிரஸ் தலைமையிலான எதிர்கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை நியமிக்கும்படி  உத்தரவிட்டது. அதன்படி, ஷெர் பகதூர் தேவ்பா (75), கடந்த 13-ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.

இதற்கிடையே, புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று  நடைபெற்றது. 275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில், 249 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். பெரும்பான்மையை நிரூபிக்க 136 வாக்குகள் தேவை என்ற நிலையில், பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு ஆதரவாக 165 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள நேபாள பிரதமருக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “அனைத்துத் துறைகளிலும் நமது தனித்துவமான கூட்டுறவு மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என பதிவிட்டுள்ளார். 

இதற்கு பதிலளித்து நேபாள பிரதமர் ஷெர் பகதுர் தேவ்பா வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நட்பு மேலும் வலுப்பட உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளேன்” என பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com