திருப்பூரில் கடந்த 5 மாதங்களில் காணாமல் போன 58 சிறுவர்-சிறுமிகள் மீட்பு

திருப்பூர் மாநகரில் கடந்த 5 மாதங்களில் காணாமல் போன 58 சிறுவர்-சிறுமிகளை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர். தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.
மீட்பு
மீட்பு
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகரத்தில் காணாமல் போன சிறுவர்கள் மற்றும் சிறுமிகள், குழந்தை தொழிலாளர்கள், பிச்சை எடுக்கும் குழந்தைகளையும் விரைந்து கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

அதன் பேரில் துணை கமிஷனர் சுரேஷ்குமார் கண்காணிப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் மோகன் மேற்பார்வையில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பதுருன்னிஷாபேகம் தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 10 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இதுவரை திருப்பூர் மாநகரில் 71 சிறுவர், சிறுமிகள் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 58 சிறுவர்- சிறுமிகள் கடந்த 5 மாதங்களில் தனிப்படையினர் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நல குழு மூலமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தனிப்படையினரால் 10 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 2017-ம் ஆண்டு, 2018-ம் ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 42 குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பிச்சை எடுக்கும் சிறுவர், சிறுமிகள் திருப்பூர் மாநகரில் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழு மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பாதுகாவலர் இல்லாத குழந்தைகளை, குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுவர், சிறுமிகள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பிச்சை எடுக்கும் குழந்தைகளை கண்டுபிடித்து குழந்தைகள் நலக்குழு முன்பு ஒப்படைத்த தனிப்படை போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com