கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு அதிக கடன் வழங்க உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு அதிகமாக கடன் வழங்க வேண்டும் என்று காணொலிக்காட்சி மூலம் அதிகாரிகளுடன் நடந்த கலந்தாய்வில் அமைச்சர் இ.பெரியசாமி உத்தரவிட்டார்.
அமைச்சர் இ.பெரியசாமி
அமைச்சர் இ.பெரியசாமி
Published on

திண்டுக்கல்:

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் அனைத்து மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

இதில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்து மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:-

ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் அதிக அளவில் கடன் வழங்க வேண்டும். மேலும் விவசாயிகள் பயிர்க்கடன் கேட்டு கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் தாமதமின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில் காவிரி, வைகை ஆறுகளில் தண்ணீர் திறந்துவிட இருக்கிறது.

எனவே விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான உரங்களை இருப்பு வைத்து வழங்க வேண்டும். அதேபோல் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கும் அதிகமாக கடன் வழங்க வேண்டும்.

மேலும் மாநிலம் முழுவதும் சிறு வணிகக்கடன்கள் அதிகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. கடனை திருப்பி செலுத்தும் சிறுவணிகர்களுக்கு கூடுதலாக கடன் வழங்க வேண்டும். ரேஷன்கடைகளில் அத்தியாவசிய பொருட்களை இறக்கும் போது எடையை ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல் பொதுமக்களுக்கு எடை குறையாமல் பொருட்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com