ஊட்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை

ஊட்டி நகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 250 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ பரிசோதனை
மருத்துவ பரிசோதனை
Published on

ஊட்டி:

ஊட்டி நகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து குப்பைகளை வீடு, வீடாக சென்று சேகரிப்பது, நகர் பகுதிகளை சுத்தமாக வைப்பது போன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா ஏற்படுவதை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஊட்டி அப்பர் பஜாரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. சுகாதார குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். முதலில் வெளிநோயாளிகள் சீட்டு வழங்கப்பட்டு உயரம், எடை சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளதா? என்று பரிசோதிக்கப்பட்டது. ஸ்கேன் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் தூய்மை பணியாளர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 250 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை ஊட்டி நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com