மங்களமேடு அருகே அம்மா மினி கிளினிக் அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மங்களமேடு அருகே கீழப்புலியூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கீழப்புலியூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
கீழப்புலியூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
Published on

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் கிராமத்தில், தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. இதேபோல் கீழப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுகுடல் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடத்தப்பட உள்ளது.

இதையறிந்த கீழப்புலியூர் கிராம மக்கள் அப்பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் எதுவுமே கிடையாது. இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலி டாக்டர்களிடம் மருத்துவம் பார்த்து உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசு சார்பில் அம்மா மினி கிளினிக் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, எங்கள் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் அமைப்பதற்காக ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென இடமாற்றம் செய்து, அதனை சிறுகுடல் கிராமத்தில் அமைத்து விட்டனர். அதனை மாற்றி கீழப்புலியூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் அமைக்க வேண்டும், என்றனர்.

பெரம்பலூர்- எழுமூர் சாலையில் கீழப்புலியூர் பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, குன்னம் தாசில்தார் சின்னதுரை, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், ஸ்டான்லி செல்லகுமார், வட்டார மருத்துவ அலுவலர் வளவன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புதிய இடத்தை தேர்வு செய்து அங்கு அம்மா மினி கிளினிக் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கீழப்புலியூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com