ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளையில் கைதான முக்கிய குற்றவாளிக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்

சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியை 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
குற்றவாளியை போலீசார் அழைத்து சென்ற காட்சி.
குற்றவாளியை போலீசார் அழைத்து சென்ற காட்சி.
Published on

ஓசூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் இருந்து 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புறப்பட்டது. கடந்த மாதம் 21-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் அந்த லாரி சென்றபோது பின்னால் மற்றொரு லாரியில் வந்த மர்ம நபர்கள், டிரைவர்களை தாக்கி விட்டு ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் மத்தியபிரதேசம் சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மத்தியபிரதேசம் மாநிலம் இண்டூர் பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளியான பரத்தேஜ்வாணி (வயது 37) என்பவரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார், அவரை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நேற்று அழைத்து வந்தனர்.

ஓசூர் அரசு மருத்துவமனையில் போலீசார் நேற்று பரத்தேஜ்வாணிக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். பின்னர் அவரை ஓசூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். பரத்தேஜ்வாணிக்கு 13 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு சூளகிரி போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி தாமோதரன், 10 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com