

மும்பை:
மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ள கொரோனா வைரஸ் மந்திரிகளையும் விடாமல் துரத்தி வருகிறது. மந்திரிகள் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை மந்திரிகள் அசோக் சவான், ஜித்தேந்திர அவாத், அஸ்லாம் சேக், வர்ஷா கெய்க்வாட் உள்பட பல மந்திரிகள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். சமீபத்தில் கூட சுற்றுலாத்துறை மந்திரியும், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே கொரோனா பாதிப்புக்கு ஆளானார்.
தற்போது கொரோனா 2-வது அலையில் மந்திரி தனஞ்செய் முண்டே பாதிக்கப்பட்டு உள்ளார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக நலத்துறை மந்திரியான தனஞ்செய் முண்டே கொரோனாவால் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
ஏற்கனவே அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.