

பாட்னா:
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ். கால்நடை தீவன ஊழல் உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு லல்லு பிரசாத் யாதவ் ஜாமீனில் வெளியில் வந்து டெல்லியில் உள்ள தனது மகள் மிசா பாரதியின் வீட்டில் தங்கி ஒய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தனது தந்தை லல்லு பிரசாத் யாதவை தம்பி தேஜஸ்தி யாதவ் பிணைக்கைதியாக வைத்துள்ளதாக லல்லு பிரசாத் யாதவின் மூத்த மகனும் எம்.எல்.ஏ.வுமான தேஜ் பிரதாப் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் சத்ரா ஜனசக்தி பரிவத் என்ற சமூக அமைப்பு சார்பில் பயிற்சி வகுப்பு தொடங்கியது. இதில் கலந்து கொண்ட தேஜ் பிரதாப் பின்னர் கூறியதாவது:-
என் தந்தை சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் அவர் டெல்லியிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் பல நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவருக்கு நான் எந்த அழுத்தத்தையும் தர விரும்பவில்லை. என்னுடன் பாட்னாவில் வந்து தங்கும்படி கூறியும் அவரை அனுமதிக்க மறுக்கின்றனர்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தில் தேசிய தலைவராக வேண்டும் என்று கட்சியிலேயே சிலர் கனவு காண்கின்றனர். அவர்களது பெயரை குறிப்பிட விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் தேஜ் பிரதாப்பின் குற்றச்சாட்டுக்கு தேஜஸ்வி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ஜேடியுவின் செய்தி தொடர்பாளர் உண்மையில் இது ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்குள் நடக்கும் குடும்ப விவகாரம். தேஜ் பிரதாப் யாதவ் முன்வைத்த குற்றச்சாட்டை புகாராக அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படியுங்கள்...நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் வைத்திருந்தாரா?- வெளியான புதிய தகவல்