

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள கட்டாரங்குளம் தெற்கு தெருவில் குடியிருப்பவர் அண்ணாமலை மகன் சின்ன மாரியப்பன் (வயது 55) . இவர் சிதம்பரம்பட்டி கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். நேற்று கோவிலில் பூஜை வைப்பதற்காக பொங்கல் தயாரிப்பதற்கு பக்கத்தில் உள்ள மோட்டார் பம்புசெட் அறைக்கு சென்று அரிசியை கழுவிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் ரூம் அருகில் கிடந்த மின்சார ஒயர், சின்னமாரியப்பன் மீது பட்டு தூக்கி வீசப்பட்டார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் சென்று சின்ன மாரியப்பன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இந்த சம்பவம் பற்றி நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி பலியான சின்ன மாரியப்பனுக்கு பேச்சியம்மாள் (54) என்ற மனைவியும், மாரியம்மாள் (22), சுடலையம்மாள் (20) ஆகிய 2மகள்களும் உள்ளனர்.