

கொட்டாம்பட்டி:
கொட்டாம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. ஆற்று பாசனம், கால்வாய் பாசனம், பருவ மழையை நம்பியே
விவசாயம் நடக்கும் பகுதிகளாக உள்ளன. இந்த ஆண்டு பருவமழையை எதிர்பார்த்து இப்பகுதி விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை
செலவழித்து விவசாயம் செய்திருந்தனர். அவைகள் நன்றாக வளர்ந்து இன்னும் 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கொட்டாம்பட்டி பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் நெல் பயிர்கள்
சேதமடைந்தது. கொட்டாம்பட்டி அருகே உள்ள ஓட்டக்கோவில்பட்டியில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் தேங்கி அழுகின.
இதன் காரணமாக பல ஆயிரம் ரூபாய் வரை ஏக்கருக்கு செலவளித்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது நாள் வரை தண்ணீர் இல்லாமல் கடும் சிரமத்திற்கு
மத்தியில் பயிர்களை விளைவித்த நிலையில், தற்போது மழைநீரால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.