கவர்னர் மாளிகை விருந்தினர் அறையில் தங்கியுள்ள கிரண்பேடி

இன்னும் ஓரிரு நாளில் புதுவையில் இருந்து வெளியேறுவேன் என்றும் தனது பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவதாகவும் கிரண்பேடி தெரிவித்தார்.
கிரண்பேடி
கிரண்பேடி
Published on

புதுச்சேரி:

புதுவை கவர்னராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டார்.

புதுவை கவர்னர் பொறுப்பு தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுவை கவர்னர் பொறுப்பை ஏற்க நேற்று மாலை தமிழிசை புதுவை வந்தார்.

அதற்கு முன்னதாக பதவி நீக்கப்பட்ட கிரண்பேடியை வழியனுப்பும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. புதுவை போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிருஷ்ணியா தலைமையில் கவர்னர் மாளிகை முன்பு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதனை ஏற்ற கிரண்பேடி கவர்னர் மாளிகை எதிரில் தன்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுவையில் இருந்து விடை பெறுவதாகவும் புதுவை மக்கள் நல்லவர்கள் என்றும் புதுவை இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

மேலும், இன்னும் ஓரிரு நாளில் புதுவையில் இருந்து வெளியேறுவேன் என்றும் தனது பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவதாகவும் கிரண்பேடி தெரிவித்தார்.

வழக்கமாக பதவியை விட்டு வெளியேறும் கவர்னர்கள் வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தவுடன் கவர்னர் மாளிகையை விட்டு உடனடியாக வெளியேறுவார்கள். ஆனால், கிரண்பேடி கவர்னர் மாளிகையில் 2 நாட்கள் தங்குகிறார். அங்கு உள்ள விருந்தினர் அறையில் அவர் தங்கியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com