

தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில். இவரது 8 வயது மகன் முகமது சித்திக்.
நேற்று மாலை 3 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த முகமது சித்திக்கை காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் முகமது இஸ்மாயிலிடம் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறுவனை கடத்திச்சென்றதாக புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்து வந்தனர்.
சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பாக காரின் பதிவு எண் குறித்து அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் சுங்கச்சாவடியில் சிறுவன் முகமது சித்திகை கடத்தி சென்ற காரை மடக்கி பிடித்தனர். பின்னர் சிறுவனை மீட்டு காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.