கள்ளக்குறிச்சியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல் - கண்காணிப்பு குழுவினர் நடவடிக்கை

கள்ளக்குறிச்சியில் உாிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ.4 லட்சத்தை நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
4 லட்சம் ரூபாயை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கண்காணிப்பு குழுவினர் ஒப்படைத்த போது எடுத்த படம்.
4 லட்சம் ரூபாயை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கண்காணிப்பு குழுவினர் ஒப்படைத்த போது எடுத்த படம்.
Published on

கள்ளக்குறிச்சி:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்தமாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலை சமூகமாக நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் .கள்ளக்குறிச்சி அருகே மாடூர் சுங்கச்சாவடியில் நேற்று காலை 6 மணியளவில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பணிமேற்பார்வையாளர் மதுரைமுத்து தலைமையில் நிலையான கண்காணிப்புக்குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கள்ளக்குறிச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை அவர்கள் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் உரிய ஆவணம் இன்றி ரூ.4 லட்சம் எடுத்துவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவரிடம் நிலையான கண்காணிப்பு குழுவினர் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் சங்கராபுரம் அருகே விரியூர் கிராமத்தை சேர்ந்த அலெக்சாண்டர் (வயது 40) என்பது தெரியவந்தது. மேலும் அவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஏனாத்தூர் ஏரியில் மீன் வளர்ப்பதற்கு ஏலம் எடுக்க பணத்தை எடுத்து செல்வதாக தெரிவித்தார். இருப்பினும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், அந்த பணத்தை நிலையான கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சப்-கலெக்டருமான ஸ்ரீகாந்திடம் ஒப்படைத்தனர். அப்போது தாசில்தார் பிரபாகரன், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்மதி உள்பட பலர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com