களக்காடு தலையணை இன்று திறப்பு- நிபந்தனைகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

களக்காடு தலையணையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
களக்காடு தலையணை
களக்காடு தலையணை
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது.

வனத்துறையால் சுற்றுச்சூழல் சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீரில் குளுமை அதிகம் என்பதாலும், மூலிகைகளை தழுவியபடி ஓடி வருவதாலும் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தினசரி உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா 2-ம் அலை காரணமாக தலையணை சுற்றுலா ஸ்தலம் கடந்த ஏப்ரல் 16-ந் தேதி மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள், செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் வந்ததை அடுத்து அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

பல்வேறு இடங்களில் சுற்றுலா ஸ்தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன, அதன்படி 4 மாதங்களாக மூடப்பட்டுள்ள தலையணை இன்று காலை திறக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபற்றி களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, சுற்றுலா பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் அரசு விதித்துள்ள கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், தலையணைக்கு காலை 9 மணி முதல் மாலை 3-30 மணி வரை அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்த அவர் தலையணையை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

களக்காடு புலிகள் காப்பகத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட துணை இயக்குனர் ரமேஸ்வரன் வன விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடன் வனப்பகுதிக்குள் நுழைவோரை சுட்டு தள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com