மருந்து கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு- வேலைக்காரி கைது

ஆரல்வாய்மொழி அருகே மருந்து கடை உரிமையாளர் வீட்டில் 17 பவுன் நகை பணம் திருட்டு போனது. இதுதொடர்பாக வேலைக்காரி கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி கீழரத வீதியை சேர்ந்தவர் சபரிகிரிசன் (வயது 43). மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது வயதான தாய், தந்தையை பராமரிக்க தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் குருந்தன்கோடு அம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி (25) என்பவரை வேலைக்கு அமர்த்தினார்.

சில நாட்களுக்கு முன்பு ஜெயலட்சுமி தனது வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்பு அவர் வேலைக்கு திரும்ப வரவில்லை.

இந்தநிலையில், சம்பவத்தன்று சபரிகிரிசன் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 17 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து அவர் ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சபரிகிரிசன் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, ஊருக்கு சென்றிருந்த வேலைக்காரிக்கும், நகை திருட்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து வேலைக்காரி ஜெயலட்சுமி பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்ேபாது அவர் வேலை செய்த வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இந்த திருட்டு சம்பவத்திற்கு அவரது தாய் பார்வதி மற்றும் அண்ணன் சிவகுமார் (27) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

ஜெயலட்சுமி கொடுத்த தகவலின்படி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 17 பவுன் நகையையும், ரூ.15 ஆயிரம் பணத்தையும் போலீசார் மீட்டனர். அத்துடன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயலட்சுமி, தாயார் பார்வதி, அண்ணன் சிவகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com