39 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி- தமிழக அரசு உத்தரவு

சிவகங்கை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் 39 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு
Published on

சென்னை:

மதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதுபோல திருப்பூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் சில இடங்களில் 14-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு, எருது விடும் விழாவை நடத்த கவர்னர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் கூச்சகல்லூர், ஓம்பாலக்காடு, கும்மானூர்; திருப்பத்தூர் மாவட்டம் காசிநாயக்கன்பட்டி, துக்கியம், கல்நார்சம்பட்டி, வெள்ளக்குட்டை, வள்ளிப்பட்டு, கோதுர், கொத்தகோட்டை, நிம்மியம்பட்டு, மூக்கனூர், தேக்குப்பட்டு, கோதண்டகுப்பம், வீரன்குப்பம், நரியம்பட்டு;

சிவகங்கை மாவட்டம் தமராக்கி தெற்கு; வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, சிவநாதபுரம், குத்லவாரிபள்ளி, பனமடங்கி, கீழ்முத்துகூர், மூஞ்சுர்பட்டு, சோழவரம், கோவிந்தரெட்டிபாளையம், கீழரசம்பட்டு, வி.மதுர், பாக்கம்பாளையம்,

சேர்பாடி, புள்ளிமேடு, பெரிய ஏரியூர், கீழ்கொத்தூர், ஊசூர், மேல்மயில், கம்மவான்பேட்டை, கீழ்வல்லம், கரசமங்கலம், அரியூர், இறைவன்காடு, ஆற்காட்டான் குடிசை, சின்னபாலம்பாக்கம், வந்தரந்தாங்கல் ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு அல்லது வடமாடு அல்லது மஞ்சுவிரட்டு அல்லது எருதுவிடும் விழாவை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com